Tamil

ஞாயிறு, 17 ஜூலை, 2016

கனிச்சுவை!. தனிச்சுவை!..


வித்தினை மறைத்தி டாமல் 
வெளியிலே தெரியக் காட்டிக்
கொத்துகொத் தாகத் தொங்கும் 
கொல்லாம்ப ழங்காள்! நீவிர்
எத்தனை நாள்கள் இன்னும்
எங்களை மறந்தி ருப்பீர்?..
ஒத்தைம ரத்துக் கொம்புக்(கு)
ஒருவிடை தரமாட் டீரோ?..

பண்டைய நாளில் எங்கள்
பள்ளம்ஊர்ப் பெருந்து றைக்கும்
அண்டையில் விளைக ளுக்குள்
அடர்த்தியாய்க் காய்த்தி ருந்தீர்..
கண்டதும் குறிதப் பாது
கல்லெறிந்(து) உம்மை வீழ்த்தி
உண்டதை நினைக்கும் போழ்தில்
ஊறு(து)உம் பழச்சு வைதான்!..

கடல்குளிக் கையிலே கொல்லாங்
கனிகளை விட்டெ றிந்(து),எம்
உடலொடு கனிக ளுக்கும்
உப்புநீர்க் குளியல் தந்து,
மடமட வென்று வெள்ளை
மணல்மிசை வந்த மர்ந்து,
படபட வென்று தின்ற
பழச்சுவை தனிச்சு வைதான்!..

முந்திரிப் பருப்பு காயும்
முன்னமே அறுத்துத் தின்னும்
தந்திரம் அறிந்த நானும்
தம்பிமார் பலரும் நீண்ட
தொந்தர(வு) இழைக்க, எம்மைத்
துரத்திய நாடான் மாரை
இந்தநே ரத்தில் கூட
எண்ணிடில் நகைச்சு வைதான்!..

குமரிமா வட்ட மெங்கும்
கொல்லாம்ப ழத்தின் ஆட்சி..
எமதுமண் வாச னைக்குள்
என்றும்கொல் லண்டி வீச்சி..
நமதுநாட் டிற்குக் காசு
நல்கிடும் முந்தி ரிக்குத்
தமிழனின் புதிய ஆட்சி
தரட்டும்ஓர் தகுந்த நீதி!!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக