தமிழின் 'ழகரம்' தனியழகு!
தமிழா, அதைநீ தினம் பழகு!
அழகில் ழகரம் இருப்பதனால்
அச்சொல் அழகாய் ஒலிக்கிறது..
அழகின் ழகரம் தவறானால்
அய்யோ! எனமனம் சலிக்கிறது!..
நற்றமிழ் பயில்வோர் நாப்பழக்கம்
நம்மவர் இனத்தை அளக்கிறது..
கற்றவர் ழகரத்(து) ஒலிச்சுத்தம்
காலமும் தமிழை வளர்க்கிறது!..
குழலிலும் யாழிலும் ழகரங்கள்
கொஞ்சிடும் இசையைக் கொடுக்குது,பார்:
உழவிலும் மழையிலும் ழகரம்தான்
ஓசையின் அழகை விதைக்குது,பார்!..
வாழையும் பழமும் ழகரத்தால்
வழங்கும் சுவைதனை யார்மறுப்பார்?
தாழையின் பெயரில் ழகர ஒலி
தரித்திடும் நறுமணம் யார்மறப்பார்?..
தொழுகையைச் சொல்லும் போதினிலே
தூய்மையை ழகரம் தருகுது,பார்!
முழுமையென்(று) உரைக்கும் ஓசையிலே
முத்தமிழ் மணமே பெருகுது,பார்!..
ஈழம் எனுமொரு சொல்லினுக்குள்
ஈரம் விளைப்பது ழகரமன்றோ?..
ஆழ நீர்நிலை ஆழியிலும்
அழகாய்த் தவழ்வது ழகரமன்றோ?..
தரணியின் மொழிகள் எவற்றுள்ளும்
தமிழ்போல் ழகர எழுத்தில்லை..
உரமுறு தமிழா, உணர்ந்திடுவாய்:
உன்னினும் உயர்ந்தோர் எவருமில்லை!..
மொழியும் விழியும் ழகரமின்றி
முழுமை பெற்றிட முடியாது..
மொழியில் ழகரம் வலுவடைந்தால்
மூத்த தமிழ்க்குடி மடியாது!!..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக