
சாலத் தமிழ்செய்த சான்றாண்மைப் பேராளன்:
காலத்தை வென்ற கவிப்புலவன் - ஞாலத்தே
எண்ணற்றோர் நெஞ்சில் இடம்பெற்ற நூலரசன்:
கண்ணதாசன் என்னும் கவி.
செட்டிநாட்டுச் செல்வம்: திரைப்பாட்டின் வான்சிகரம்:
மட்டிலாக் கீர்த்தி மணிமகுடம் - மெட்டினுக்குள்
நுண்ணறிவைக் கோத்(து)எம்மை நூறுதரம் பாடவைத்த
கண்ணதாசன் என்னும் கவி.
சொல்லடுக்கில் பாட்டின் சுகம்தந்தான்: செந்தமிழ்ப்
பல்லக்கில் ஏறிப் பவனிவந்தான் - வெல்லுதற்(கு)
இன்னொருசொல் காணா இலக்கியத் தாள்விரித்தான்:
கண்ணதாசன் என்னும் கவி.
அர்த்தமுள்ள இந்துமத ஆவணமும், மானிடர்தம்
கர்த்தர் புகழ்(இ)யேசு காவியமும், - தர்க்கமிலாத்
தண்ணமுதில் தோய்த்துத் தரணியர்க்குத் தந்தமகன்
கண்ணதாசன் என்னும் கவி.
பாமரனின் சுண்டுகளும் பைந்தமிழை உச்சரித்துக்
காமமுற வைத்த கலைப்பித்தன் - மாமலர்சேர்
வண்ண மடந்தை வரம்பெற்ற சொற்சுரபி
கண்ணதாசன் என்னும் கவி.
"நில்லேன்;அஞ் சேன்!"என்று நெந்சை நிமிர்த்தியவன்:
சொல்லேர் உழவர்க்குத் தோழனவன் - பல்லோர்கா(து)
உண்ணற்(கு) அமிழ்(து)ஈந்த ஓங்கு தமிழ்வள்ளல்
கண்ணதாசன் என்னும் கவி.
பாட்டில் இசையின் பதிவிருக்க, கேட்போர்கள்
மேட்டில் அமர்ந்துகொண்டு மெய்சிலிர்க்க, - நாட்டிலெங்கும்
பண்ணரங்கம் கோடி படரவிட்ட பேரிறைவன்
கண்ணதாசன் என்னும் கவி.
"பிறவாயோ மீண்டும், பெருங்கவிஞா!" என்(று)ஈண்(டு)
அறவோர் பலரும்அழைக் கின்றார்: - மறவாமல்
விண்ணோர் சபைக்கு விடைகூறி இங்(கு)எழுவான்
கண்ணதாசன் என்னும் கவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக