Tamil

ஞாயிறு, 17 ஜூலை, 2016

மூடர்காள், உண்மை சொல்வீர்!



அண்ணனும் தங்கை யும்இங்(கு)
         ஆழிவெண் மணல்தீ ரத்தில்
வெண்ணுரை அருகே தாங்கள் 
         விரும்பிய நடைமேற் கொள்ளும்
கண்ணிறைக் காட்சி எம்மைக்
         களிப்புறச் செய்வ தாகும்..
இன்னமும் எதிர்கா லத்தில்
         இதுதொடர்ந் திடவும் வேண்டும்!..

இருப்பினும் எமதெண் ணத்தில்
         எரிதழல் கொட்டும் வண்ணம்
உருப்படாத் துறைமு கத்தின்
         ஊழலார் திட்டம் தீட்டி,
பொறுப்பிலாச் சதியின் மாந்தர்
         புதுப்பணி தொடங்கி விட்டார்..
திருப்பியும் கடற்க ரைக்கே
         தீமைகள் ஆற்று கின்றார்!..

வர்த்தகத் துறைமு கத்தை
         வழங்குவ தாகச் சொல்லும்
மெத்தமே தாவி கட்கு
         மீனவன் விடுக்கும் கேள்வி:
இத்தகு திட்டம் எங்கே?..
         இனயமா? குளச்ச லா?ஏன்
மொத்தமாய்க் குழப்பு கின்றீர்?
         மூடர்காள், உண்மை சொல்வீர்!..

குளச்சலுக் காக நீங்கள்
         கொண்டுவந் திருந்த திட்டம்
விலக்கிய நோக்கம் என்ன?..
         விளக்கிட மறுப்ப தென்ன?..
நலச்செயல் இதுவென் றேநீர்
         நாடகம் நடிக்கும் வேலை
உளைச்சலைத் தருவ தைநீர்
         உணர்ந்திட மறுப்ப தென்ன?..

கடற்கரை மாந்த ரைநீர்
         காவுகொ டுத்த பின்தான்
நடக்குமா நன்மை யெல்லாம்?..
         நம்பவா யாம்நும் கூற்றை?..
அடக்கியா ளுகின்ற போக்கை
         ஆரிடம் காட்டு கின்றீர்?..
தொடத்துணி வுண்டா, எங்கள்
         துறையர்வாழ் வாதா ரத்தை?..

வரைவினை எமக்குக் காட்டு:
      வாய்ச்சவ டால்நிப் பாட்டு!
அறையினில் நடப்ப தென்ன?
         அம்பலம் அறியக் காட்டு!
முறையிலா நீதி யொன்றை
         முன்னிலைப் படுத்து கின்ற
துறைமுகத் திட்டம் யாரைத்
         தொலைப்பதற் கென்று காட்டு!..

பதவியைத் துறப்பே னென்றும்
         பார்க்கலாம் ஒருகை யென்றும்
உதறலோ(டு) உளறும் போக்கால்
         ஒருபருப் பும்வே காது..
மதவெறிக் கள்ளை யூட்டி
         மறுபடி எங்கள் மண்ணில்
விதவிதக் குழப்பம் செய்ய
         விரும்பினால் அதுதே றாது!..

அலைகள்வந்(து) எங்கள் வீட்டை
         அடிக்கடி இழுத்துச் செல்லும்
நிலைமைநீர் கண்டி ருந்தும்
         நினைத்திரோ எம்மைப் பற்றி?..
குலைகுலை யாக 'நோட்டு'
         கொட்டிடும் "ஹார்பர்" மட்டும்
மலையென மனதில் வைத்தீர்:
         மானுடம் எங்கே வைத்தீர்?..

இரக்கமில் லோரே, நீங்கள்
         எமைவிட்டு விலகிப் போங்கள் :
அரக்கரே, ஆழி மைந்தர்க்(கு)
         அல்லலே நினைக்கின் றோரே,
உரக்கநீர் கூவிக் கூவி
         உழைப்பதை நிறுத்திக் கொள்க:
பரக்கவே கிடக்கும் நெய்தல்
         படுகையின் உரிமை வாழ்க!!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக