Tamil

ஞாயிறு, 17 ஜூலை, 2016

முருங்கையும் வெறுங்கையும்!..

முற்றத்தே முருங்கையொன்றை நட்டு வைத்தால் 
       முதியவரும் இளமையுடன் வாழ்வார் என்று 
கற்றறிந்தார் பொதுவாகச் சொல்வார்; உண்மை. 
       காரணமும் அனைவருக்கும் தெரிந்த உண்மை..
மற்றிதனை நட்டவனோ வெறுங்கை யோடே
       மக்களிடை நடந்திடுவான் என்னும் கூற்றும்
நற்றமிழர் மத்தியிலோர் பழஞ்சொல் லாக
       நடமாடும் காரணத்தை அறிவீர் கொல்லோ?..

முதுகிழவர் முதுகினில்கூன் விழுந்த பின்னர்
       முன்னொருகைத் தடியூன்றி நடந்து செல்வார்:
எதுவரினும் முருங்கையினைத் தவறா(து) உண்டால்
       இத்தகுகைத் தடியொன்றும் தேவை யில்லை..
இதுகுறித்தே "முருங்கைநட்டான் வெறுங்கை யோடே
       இனிதுநடப் பான்! "என்னும் பழஞ்சொல் தந்தார் :
பொதுவழக்கில் பொருள்பொதிந்த பழஞ்சொல் ஒன்றைப்
       புகுத்தியநம் தமிழ்மரபின் புகழ்தான் என்னே!..

முருங்கைமரத் திற்(கு)"ஊரான் முதலி" யென்றும்,
       முருங்கைக்கன் றிற்(கு)"ஊரான் பிள்ளை" யென்றும்
அருங்குணங்கள் பேசும்ஆயுள் மருத்து வத்தில்
       அர்த்தங்கள் இருப்பதனை அறிகின் றோம்யாம்..
ஒருங்கிதனை நினைத்(து)"ஊரான் பிள்ளை யைநன்(கு)
       ஊட்டிவளர்த் தால்தன்றன் பிள்ளை நன்றாய்ச்
சிறந்துவளர்ந் தோங்கும்!"எனச் செப்பி வைத்தார்..
       செந்தமிழார்ப் பழஞ்சொல்லின் சீர்தான் என்னே!..

       
                            ××××××

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக