Tamil

ஞாயிறு, 17 ஜூலை, 2016

ஒருவரும் வெல்லலையே!..

சங்குத்துறை அழகுக் கடற்கரையில் - எங்கள் 
       சரித்திரம் உறங்கிக் கிடக்கிறது.. 
பொங்கும் நினைவலைகள் ஒவ்வொன்றும் - நெஞ்சில்
       புதிய பூரிப்பு படைக்கிறது!..

ஐம்பதாண்டிற்கு முன்பிருந்தே - இதன்
       அருமை பெருமைகளை நானறிவேன்..
பைம்புனல் அலைகள் தவழ்ந்துவரும் - இந்தப்
       பள்ளம் கடற்கரையின் பாடறிவேன்!..

தாழையொடு கோட்டுப் புன்னைகளும் - நன்கு
       தழைத்த பச்சோலைத் தென்னைகளும்..
வேலிக் கற்றாழையொடு பிரண்டை - சுற்றி
       விரவிக் கிடந்த கடற் சோலையது!..

புத்தன்துறை சென்று படிப்பதற்கு - இந்தப்
       பொழிலின் வழியாகச் சென்றுள்ளேன்..
சத்தம் போட்டு பல பாடல்களைச் - சொல்லிச்
       சங்கீத பாடம் பயின்றுள்ளேன்!..

கொட்டுகுளம் வீழ்ந்து குளித்துள்ளேன் - அங்குக்     
       குட்டிச் சிப்பிநண்டு பிடித்துள்ளேன்..
செட்டு சேர்த்து அடி வைத்துள்ளேன் - சில
       சீனடிகள் அங்குப் படித்துள்ளேன்!..

ஈர மணல் திடலின் உள்ளிருந்து - நான்
       எடுத்த விளாங்கினை வகுப்பறையில்
ஊரவிட்டு இளம் டீச்சர்களைப் - பயந்(து)
       ஓடவிட்டுக் குறும்(பு) இழைத்துள்ளேன்!..

முளளுருண்டைகளை உருட்டிவிட்டு - அவை
       முந்திடாதபடி ஓடி வென்று..
எள்ளுருண்டைகளைப் பரிசு பெற்று - மூச்(சு)
       இரைக்க இரைக்க நான் சிரித்துள்ளேன்!..

அள்ளும் எழில் சங்குத் துறையலையே - உன்மேல்
       ஆசை எனக்கின்னும் குறையலையே..
உள்ளம் கவர் பள்ளம் வெள்ளலையே - உன்னை

      ஒருவரும் இதுவரை வெல்லலையே!..



                       ****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக