ஈரம் சொல்லும் அஞ்சலி!.. """"""""""""""""""""""""""
இணைஎவரு மற்ற எம்மவர் - இன்று
இறப்பெய்தி விட்ட நல்லவர்..
நினைவிருக்கும் வரையில் நிற்பவர் - எங்கள்
நெஞ்சத்தில் குடியி ருப்பவர்!..
கடலோர மக்கள் காவலர் - நெய்தல்
காணிகளின் வள்ளல் நாயகர்..
மிடல்சான்ற ஜேப்பி யாரவர் - போன்ற
மீனவர்தம் செம்மல் யாரவர்?..
தனியொருவ னாக நின்றவர் - வரும்
தடைகள்தமை எளிதில் வென்றவர்..
துணிச்சல்மிகு கொள்கை பூண்டவர் - ஒரு
துறைமுகத்தைத் தந்து ஆண்டவர்!..
ஏழைகளின் வீட்டில் தீபமாய் - கல்வி
எழுத்தறிவை யூட்டும் வேதமாய்..
தாழ்வதில்லை என்னும் பாடமாய் - நின்ற
தந்தைசென்றார் இன்று தூரமாய்!..
நெடிதுயர்நம் தந்தை தோற்றமும் - இதழ்
நிறைந்தசிரிப் புடைய வண்ணமும்..
நொடிப்பொழுதில் ஓடிப் போனதேன்? - மனம்
நொந்துவிட விதியும் விழைந்ததேன்?..
நன்றிசொல வார்த்தை ஒன்றிலை - எங்கள்
நாயகர்க்கு மரணம் இன்றிலை..
என்றுமுள(து) எங்கள் அஞ்சலி - கண்ணின்
ஈரமெலாம் சொல்லும் அஞ்சலி!!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக