Tamil

திங்கள், 25 ஜூலை, 2016

தொளவை துணையுண்டு!


கட்டு மரம்மீது மீனவன் - அலை
கடலில் தனியொருவன் தானவன்.. 
வெட்டு கடல்வந்து விரட்டினும் - அதன்
விளிம்பை எதிர்கொள்ளுவான் அவன்!..


ஒத்தனா மரத்துக்காரனாம் - கையில்
ஒரு தொளவை மட்டும் தோழனாம்..
அத்தனைக் கடற்பரப்பிலும் - அதை
ஆயுதமாக்கிடும் வீரனாம்!..

கடலின்மீது அவன் செல்லுவான் - அங்குக்
கலங்கிடாது தொழில் செய்குவான்..
உடலில் வீசிடும் உப்பு நீர் - கண்டு
ஒருநிமிடமேனும் ஓய்ந்திடான்!..

உருண்டு திரள்கின்ற அலைகளே - இந்த
ஒத்தனா மரத்தை மூடுவீர்..
மருண்டு போகான் அம்மீனவன் - நீர்தான்
மறுபடியும் விலங்கே ஓடுவீர்!..

படுத்த மீனையும் வலையையும் - இன்று
பாய்ந்து பிடுங்கவா பார்க்கிறீர்?
தொடுத்து வெல்லுவான் மீனவன் - அந்தத்
தொளவை துணையுண்டு, காணுவீர்!..
×××

புதன், 20 ஜூலை, 2016

வந்திடு, வள்ளுவனே!

விடுதலை நாளிதழில்(23-07-2016) வெளிவந்தது. பார்க்க :
http://viduthalai.in/page5/126485.html

(கட்டளைக் கலித்துறை)


காலம் கடந்த கவிப்புல மாகக் கனிந்தவனை..
ஞாலம் உணர்ந்து நயந்த நெறிகளின் ஞாயிறினை..
ஆலம் விழுதினும் ஆயிரம் மேலெனும் ஆளுமையை..
சாலப் பழித்த சதியைஎவ் வாறு சகிப்பதுவே!.. 


நாடுகள் தாண்டிய நாயனார் வள்ளுவன், நாமறிவோம்..
ஏடுகள் போற்றும் எழுத்தர சன்புகழ் இன்றறிவோம்..
காடு களிலுள்ள கல்லின் மனத்தவர் காண்பதுண்டோ
பாடு புகழ்தமிழ்ப் பாவலன் வள்ளுவன் பற்றியதே?..

காவிப் பயல்களும் கண்ட நரிகளும் சாதிவெறிப்
பாவிக ளும்கூடிப் பாவலர் வேளைப் பரிகசித்துக்
கூவிப் புலம்பித் "தலித் இவன்!" என்று குரலெழுப்பித்
தாவிக் குதிக்கின்ற நாக ரிகமெங்குக் கற்றதுவே?..

எங்கள் தமிழன்னை ஈன்ற புதல்வனை இப்படியா
பங்கப் படுத்துவீர் உத்தர காண்டத்துப் பாவியர்காள்?
கங்கைக் கரையென்ன, காணும் கரையெங்கும் காட்சிதந்து
தங்கத் தகுந்தவன் தானெங்கள் ஐயன் தரணியிலே!..

இந்துக் கடற்கரை நின்றே இமயத்தை எட்டிநோக்கும்
செந்தமிழ்ச் செம்மலின் சிங்கம் நிகர்த்த சிலையிருக்க,
மந்த மதியினர்க் கும்பலின் கங்கை மருங்கினிலே
எந்த வகையினில் ஐயனின் தோற்றம் இலங்குவதே?..

தன்னை அளந்து தரணி அளந்து தடம்பதித்த
முன்னைச் சரித்திரம் முற்றும் அளந்த மொழிப்புதல்வன்
பொன்னை அளந்த புகழினன் என்னும் பொருளறியாச்
சின்னவர் முன்னர் திருவள்ளு வற்கேன் சிலையெடுப்பே?..

மதியாதார் வீடும் மடையர்கள் கோவிலும் மாளிகையும்
நதியோரத் தென்றலின் நச்சும் தமிழர் நமக்கெதற்கு?
குதியாட்டம் போடும் குரங்கிடம் நட்பினி கொள்வதுமேன்?
சதிகாரர் கங்கைத் தலம்விட்டு வா,எங்கள் சான்றவனே!..

அடக்க முடியலை: ஆத்திரம் தீரலை: அன்னியரின்
மடத்தனம் தன்னை மடக்க முடியலை: மாற்றலனின்
இடத்தில் உனக்கினி என்ன இருப்பு?சொல், எம்மவனே!
வடக்குக் கிறுக்கன் கிடக்கிறான்: வந்திடு, வள்ளுவனே!..

                ×××××

செவ்வாய், 19 ஜூலை, 2016

பொய்பேசாப் பைங்கிளி.



வெள்ளிக் குடமும் வெறுங்கால் கொலுசோடும்
பள்ளிசெல்லு முன்பே பணியாற்றும் - பிள்ளையவள்
கைவீசிச் செல்லும் கலையழகு காணீரோ,
பொய்பேசாப் பைங்கிளியே போல்!..

                     ××××

ஞாயிறு, 17 ஜூலை, 2016

முருங்கையும் வெறுங்கையும்!..

முற்றத்தே முருங்கையொன்றை நட்டு வைத்தால் 
       முதியவரும் இளமையுடன் வாழ்வார் என்று 
கற்றறிந்தார் பொதுவாகச் சொல்வார்; உண்மை. 
       காரணமும் அனைவருக்கும் தெரிந்த உண்மை..
மற்றிதனை நட்டவனோ வெறுங்கை யோடே
       மக்களிடை நடந்திடுவான் என்னும் கூற்றும்
நற்றமிழர் மத்தியிலோர் பழஞ்சொல் லாக
       நடமாடும் காரணத்தை அறிவீர் கொல்லோ?..

முதுகிழவர் முதுகினில்கூன் விழுந்த பின்னர்
       முன்னொருகைத் தடியூன்றி நடந்து செல்வார்:
எதுவரினும் முருங்கையினைத் தவறா(து) உண்டால்
       இத்தகுகைத் தடியொன்றும் தேவை யில்லை..
இதுகுறித்தே "முருங்கைநட்டான் வெறுங்கை யோடே
       இனிதுநடப் பான்! "என்னும் பழஞ்சொல் தந்தார் :
பொதுவழக்கில் பொருள்பொதிந்த பழஞ்சொல் ஒன்றைப்
       புகுத்தியநம் தமிழ்மரபின் புகழ்தான் என்னே!..

முருங்கைமரத் திற்(கு)"ஊரான் முதலி" யென்றும்,
       முருங்கைக்கன் றிற்(கு)"ஊரான் பிள்ளை" யென்றும்
அருங்குணங்கள் பேசும்ஆயுள் மருத்து வத்தில்
       அர்த்தங்கள் இருப்பதனை அறிகின் றோம்யாம்..
ஒருங்கிதனை நினைத்(து)"ஊரான் பிள்ளை யைநன்(கு)
       ஊட்டிவளர்த் தால்தன்றன் பிள்ளை நன்றாய்ச்
சிறந்துவளர்ந் தோங்கும்!"எனச் செப்பி வைத்தார்..
       செந்தமிழார்ப் பழஞ்சொல்லின் சீர்தான் என்னே!..

       
                            ××××××

சற்றும் ‘மனிதம்’ இல்லை!


ஊர்க்குருவிக் குலமே! -நீங்கள்
உச்சிவானிலே உலாவரும்போதும்
கழுகுகள் ஆவதில்லை -உங்களது
கர்வத்தில் உண்மையில்லை!

வான்கோழிக் கும்பல்களே! -நீங்கள்
வானம் வரைக்கும் சிறகு விரிப்பினும்
வண்ண மயில்களில்லை -உங்களின் 
வரிசை  நடனமில்லை!

மின்மினிப் பூச்சிகளே! -நீங்கள்
மிக்கப் பளபளப்போடு பறக்கினும்
மெழுகு வர்த்தியில்லை -தியாகம் உங்கள் 
மேனிக்குச் சொந்தமில்லை!

காக்கைகள் கூட்டங்களே! -நீங்கள்
காடு முழுதும் திரண்டு கரையினும்
காதுக்(கு) இனிமையில்லை - குயிலிசை
கற்றவர் நீங்களில்லை!

நாணல் குடும்பங்களே! - நீங்கள்
நாற்புறமும் அசைந்தாடிய போதிலும்
நாற்றுகள் ஆவதில்லை -நெல்லின் மணி
நற்கதிர் நீங்களில்லை!

எருக்குத் தோட்டங்களே! - உம்
இலைவழிப் பல்துளிப் பால்சுரந்(து) ஓடினும்
ஏந்த விருப்பமில்லை - விஷம் உம்பால்
என்பதில் சர்ச்சையில்லை!
காகிதத்துப் பூக்களே! -நீங்கள்
கண்ணைப் பறிக்கும் வனப்பில் இருப்பினும்
காதல் விளைவதில்லை -தேனை உங்கள்
காம்பு சுமப்பதில்லை!

கண்மாய்த் தவளைகளே! - நீங்கள்
காற்றைத் ‘தம்’பிடித்துக் காட்டினும் நாங்கள்
கலங்கிடப் போவதில்லை -நீங்கள் ஒன்றும்
காங்கேயம் காளையில்லை!

வெற்றுப் பட்டாசுகளே! -ஒளி
வெள்ளத்தினை நீங்கள் வாரி இறைப்பினும்
வெந்தழல் நீங்களில்லை - நான்கைந்து
வினாடிக்குள் நீங்கள்இல்லை!

சாதிச் சழக்கர்களே! - உங்கள்
சாகசங்கள் கோடி தாண்டிய போதும்
சரித்திரம் உங்கட்(கு)இல்லை! - அந்தோ!
உம்மில் சற்றும் ‘மனிதம்’ இல்லை!

ஒருவரும் வெல்லலையே!..

சங்குத்துறை அழகுக் கடற்கரையில் - எங்கள் 
       சரித்திரம் உறங்கிக் கிடக்கிறது.. 
பொங்கும் நினைவலைகள் ஒவ்வொன்றும் - நெஞ்சில்
       புதிய பூரிப்பு படைக்கிறது!..

ஐம்பதாண்டிற்கு முன்பிருந்தே - இதன்
       அருமை பெருமைகளை நானறிவேன்..
பைம்புனல் அலைகள் தவழ்ந்துவரும் - இந்தப்
       பள்ளம் கடற்கரையின் பாடறிவேன்!..

தாழையொடு கோட்டுப் புன்னைகளும் - நன்கு
       தழைத்த பச்சோலைத் தென்னைகளும்..
வேலிக் கற்றாழையொடு பிரண்டை - சுற்றி
       விரவிக் கிடந்த கடற் சோலையது!..

புத்தன்துறை சென்று படிப்பதற்கு - இந்தப்
       பொழிலின் வழியாகச் சென்றுள்ளேன்..
சத்தம் போட்டு பல பாடல்களைச் - சொல்லிச்
       சங்கீத பாடம் பயின்றுள்ளேன்!..

கொட்டுகுளம் வீழ்ந்து குளித்துள்ளேன் - அங்குக்     
       குட்டிச் சிப்பிநண்டு பிடித்துள்ளேன்..
செட்டு சேர்த்து அடி வைத்துள்ளேன் - சில
       சீனடிகள் அங்குப் படித்துள்ளேன்!..

ஈர மணல் திடலின் உள்ளிருந்து - நான்
       எடுத்த விளாங்கினை வகுப்பறையில்
ஊரவிட்டு இளம் டீச்சர்களைப் - பயந்(து)
       ஓடவிட்டுக் குறும்(பு) இழைத்துள்ளேன்!..

முளளுருண்டைகளை உருட்டிவிட்டு - அவை
       முந்திடாதபடி ஓடி வென்று..
எள்ளுருண்டைகளைப் பரிசு பெற்று - மூச்(சு)
       இரைக்க இரைக்க நான் சிரித்துள்ளேன்!..

அள்ளும் எழில் சங்குத் துறையலையே - உன்மேல்
       ஆசை எனக்கின்னும் குறையலையே..
உள்ளம் கவர் பள்ளம் வெள்ளலையே - உன்னை

      ஒருவரும் இதுவரை வெல்லலையே!..



                       ****

ஆறாக் காயம்!..


இடக்கையில் மழலை யேந்தி, 
         இன்னொரு கையால் உச்சிக்
குடத்தினைப் பிடித்துத் தாங்கிக்
        குலமகள் செருப்பில் லாமல்
நடக்கையில்.. தனது காலில்
      நறுக்கெனத் தைத்த முள்ளை
எடுத்த தன் மகனின் கையில்
           இன்னமும் ஆறாக் காயம்!..


       ***

சீரிய "ரமதான்" வாழ்த்து!


ஓரிறைத் தத்து வத்தின்
         உண்மையை உய்த்து ணர்ந்து,
காரிருள் கிழித்துத் தோன்றும் 
      ககனவெண் பிறையைப் போன்று,
ஆரினும் அமைதி காக்கும்
        அறவழித் தூயோ ருக்(கு)எம்
சீரிய "ரமதான்" வாழ்த்து!
         'தீன்'தரும் பெருநாள் வாழ்த்து!..

செல்லப் பேத்திக்கு... பிறந்தநாள் வாழ்த்து!



செல்லப் பேத்திக்கு... 
சிரிக்கும் ராசாத்திக்கு... 
நல்ல மகளுக்கு..
நாளைய புகழுக்கு...

பத்தாம் அகவைக்குப்
படியெடுத்து வைப்பவட்கு...
முத்தான "மரியா"க்கு...
முற்றன்பும் உரியாட்கு...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!..

அன்புடன்,
தாத்தா, மற்றும் பாட்டி.

'ழகரம்' பழகு!..


தமிழின் 'ழகரம்' தனியழகு!
தமிழா, அதைநீ தினம் பழகு!

அழகில் ழகரம் இருப்பதனால்
அச்சொல் அழகாய் ஒலிக்கிறது..
அழகின் ழகரம் தவறானால்
அய்யோ! எனமனம் சலிக்கிறது!..

நற்றமிழ் பயில்வோர் நாப்பழக்கம்
நம்மவர் இனத்தை அளக்கிறது..
கற்றவர் ழகரத்(து) ஒலிச்சுத்தம்
காலமும் தமிழை வளர்க்கிறது!..

குழலிலும் யாழிலும் ழகரங்கள்
கொஞ்சிடும் இசையைக் கொடுக்குது,பார்:
உழவிலும் மழையிலும் ழகரம்தான்
ஓசையின் அழகை விதைக்குது,பார்!..

வாழையும் பழமும் ழகரத்தால்
வழங்கும் சுவைதனை யார்மறுப்பார்?
தாழையின் பெயரில் ழகர ஒலி
தரித்திடும் நறுமணம் யார்மறப்பார்?..

தொழுகையைச் சொல்லும் போதினிலே
தூய்மையை ழகரம் தருகுது,பார்!
முழுமையென்(று) உரைக்கும் ஓசையிலே
முத்தமிழ் மணமே பெருகுது,பார்!..

ஈழம் எனுமொரு சொல்லினுக்குள்
ஈரம் விளைப்பது ழகரமன்றோ?..
ஆழ நீர்நிலை ஆழியிலும்
அழகாய்த் தவழ்வது ழகரமன்றோ?..

தரணியின் மொழிகள் எவற்றுள்ளும்
தமிழ்போல் ழகர எழுத்தில்லை..
உரமுறு தமிழா, உணர்ந்திடுவாய்:
உன்னினும் உயர்ந்தோர் எவருமில்லை!..

மொழியும் விழியும் ழகரமின்றி
முழுமை பெற்றிட முடியாது..
மொழியில் ழகரம் வலுவடைந்தால்
மூத்த தமிழ்க்குடி மடியாது!!..

பாட்டரசன் பிறந்தநாள் வாழ்த்து


பாட்டரசன் என்னும் பழகுதமிழ்ச் சான்றோற்(கு)இன்(று)
ஏட்டினில்யான் வாழ்த்தொன்(று) எழுதிவைத்தேன் - நாட்டிலுள்ளோர்
போற்றுகவி நாளும் புனைவோன் பிறந்ததினம்
ஏற்ற முறமலர்ந்த(து) இன்று!..

மரபுக் கவிபுனைந்து, மண்மகிழத் தந்து,
தரம்படைதத பாட்டில் தவழ்ந்(து),இங்(கு) - உரம்வாய்ந்த
யாப்பின் அரும்பயனை யாண்டும் எடுத்துரைக்கும்
பாப்புலவன் பாட்டரசன் பார்!..

எங்கள் உடன்பிறப்பே! ஏரார் கவிப்பிறப்பே!
சங்கத் தமிழின் சரிப்பிறப்பே! - உங்கள்
பிறந்ததினம் பாவின் பெருமைதினம்: உள்ளம்
திறந்துதினம் நல்குக,பாத் தேன்!..

அன்புடன்,
தொ. சூசைமிக்கேல்.

கண்ணதாசன் என்னும் கவி!


சாலத் தமிழ்செய்த சான்றாண்மைப் பேராளன்:
காலத்தை வென்ற கவிப்புலவன் - ஞாலத்தே
எண்ணற்றோர் நெஞ்சில் இடம்பெற்ற நூலரசன்:
கண்ணதாசன் என்னும் கவி.

செட்டிநாட்டுச் செல்வம்: திரைப்பாட்டின் வான்சிகரம்:
மட்டிலாக் கீர்த்தி மணிமகுடம் - மெட்டினுக்குள்
நுண்ணறிவைக் கோத்(து)எம்மை நூறுதரம் பாடவைத்த
கண்ணதாசன் என்னும் கவி.

சொல்லடுக்கில் பாட்டின் சுகம்தந்தான்: செந்தமிழ்ப்
பல்லக்கில் ஏறிப் பவனிவந்தான் - வெல்லுதற்(கு)
இன்னொருசொல் காணா இலக்கியத் தாள்விரித்தான்:
கண்ணதாசன் என்னும் கவி.

அர்த்தமுள்ள இந்துமத ஆவணமும், மானிடர்தம்
கர்த்தர் புகழ்(இ)யேசு காவியமும், - தர்க்கமிலாத்
தண்ணமுதில் தோய்த்துத் தரணியர்க்குத் தந்தமகன்
கண்ணதாசன் என்னும் கவி.

பாமரனின் சுண்டுகளும் பைந்தமிழை உச்சரித்துக்
காமமுற வைத்த கலைப்பித்தன் - மாமலர்சேர்
வண்ண மடந்தை வரம்பெற்ற சொற்சுரபி
கண்ணதாசன் என்னும் கவி.

"நில்லேன்;அஞ் சேன்!"என்று நெந்சை நிமிர்த்தியவன்:
சொல்லேர் உழவர்க்குத் தோழனவன் - பல்லோர்கா(து)
உண்ணற்(கு) அமிழ்(து)ஈந்த ஓங்கு தமிழ்வள்ளல்
கண்ணதாசன் என்னும் கவி.

பாட்டில் இசையின் பதிவிருக்க, கேட்போர்கள்
மேட்டில் அமர்ந்துகொண்டு மெய்சிலிர்க்க, - நாட்டிலெங்கும்
பண்ணரங்கம் கோடி படரவிட்ட பேரிறைவன்
கண்ணதாசன் என்னும் கவி.

"பிறவாயோ மீண்டும், பெருங்கவிஞா!" என்(று)ஈண்(டு)
அறவோர் பலரும்அழைக் கின்றார்: - மறவாமல்
விண்ணோர் சபைக்கு விடைகூறி இங்(கு)எழுவான்
கண்ணதாசன் என்னும் கவி.

அஞ்சலி!!..

ஈரம் சொல்லும் அஞ்சலி!.. 
"""""""""""""""""""""""""""""""""""""""""


இணைஎவரு மற்ற எம்மவர் - இன்று 
     இறப்பெய்தி விட்ட நல்லவர்.. 
நினைவிருக்கும் வரையில் நிற்பவர் - எங்கள் 
     நெஞ்சத்தில் குடியி ருப்பவர்!..

கடலோர மக்கள் காவலர் - நெய்தல்
     காணிகளின் வள்ளல் நாயகர்..
மிடல்சான்ற ஜேப்பி யாரவர் - போன்ற
     மீனவர்தம் செம்மல் யாரவர்?..

தனியொருவ னாக நின்றவர் - வரும்
     தடைகள்தமை எளிதில் வென்றவர்..
துணிச்சல்மிகு கொள்கை பூண்டவர் - ஒரு
     துறைமுகத்தைத் தந்து ஆண்டவர்!..

ஏழைகளின் வீட்டில் தீபமாய் - கல்வி
     எ
ழுத்தறிவை யூட்டும் வேதமாய்.. 
தாழ்வதில்லை என்னும் பாடமாய் - நின்ற
     தந்தைசென்றார் இன்று தூரமாய்!..

நெடிதுயர்நம் தந்தை தோற்றமும் - இதழ் 

     நிறைந்தசிரிப் புடைய வண்ணமும்..
நொடிப்பொழுதில் ஓடிப் போனதேன்? - மனம்
     நொந்துவிட விதியும் விழைந்ததேன்?..

நன்றிசொல வார்த்தை ஒன்றிலை - எங்கள்
     நாயகர்க்கு மரணம் இன்றிலை..
என்றுமுள(து) எங்கள் அஞ்சலி - கண்ணின்
     ஈரமெலாம் சொல்லும் அஞ்சலி!!..

பிறந்தநாள் வாழ்த்து!..


தூரிகை யேந்தி நம்மைச்
        சுகம்பெற வைக்கும் தோழர் :
"ஆரிவர்?" என்றே கண்கள் 
         அகன்றிட வைக்கும் சீனு:
பாரிடைத் தான்பி றந்த
       பரவச விழாக்கொண் டாடும்
சீரிய நன்னாள் இன்று..
          செந்தமிழ் வாழ்த்துச் சொல்வேன்!..

அன்புடன்,
தொ. சூசைமிக்கேல்.

மூடர்காள், உண்மை சொல்வீர்!



அண்ணனும் தங்கை யும்இங்(கு)
         ஆழிவெண் மணல்தீ ரத்தில்
வெண்ணுரை அருகே தாங்கள் 
         விரும்பிய நடைமேற் கொள்ளும்
கண்ணிறைக் காட்சி எம்மைக்
         களிப்புறச் செய்வ தாகும்..
இன்னமும் எதிர்கா லத்தில்
         இதுதொடர்ந் திடவும் வேண்டும்!..

இருப்பினும் எமதெண் ணத்தில்
         எரிதழல் கொட்டும் வண்ணம்
உருப்படாத் துறைமு கத்தின்
         ஊழலார் திட்டம் தீட்டி,
பொறுப்பிலாச் சதியின் மாந்தர்
         புதுப்பணி தொடங்கி விட்டார்..
திருப்பியும் கடற்க ரைக்கே
         தீமைகள் ஆற்று கின்றார்!..

வர்த்தகத் துறைமு கத்தை
         வழங்குவ தாகச் சொல்லும்
மெத்தமே தாவி கட்கு
         மீனவன் விடுக்கும் கேள்வி:
இத்தகு திட்டம் எங்கே?..
         இனயமா? குளச்ச லா?ஏன்
மொத்தமாய்க் குழப்பு கின்றீர்?
         மூடர்காள், உண்மை சொல்வீர்!..

குளச்சலுக் காக நீங்கள்
         கொண்டுவந் திருந்த திட்டம்
விலக்கிய நோக்கம் என்ன?..
         விளக்கிட மறுப்ப தென்ன?..
நலச்செயல் இதுவென் றேநீர்
         நாடகம் நடிக்கும் வேலை
உளைச்சலைத் தருவ தைநீர்
         உணர்ந்திட மறுப்ப தென்ன?..

கடற்கரை மாந்த ரைநீர்
         காவுகொ டுத்த பின்தான்
நடக்குமா நன்மை யெல்லாம்?..
         நம்பவா யாம்நும் கூற்றை?..
அடக்கியா ளுகின்ற போக்கை
         ஆரிடம் காட்டு கின்றீர்?..
தொடத்துணி வுண்டா, எங்கள்
         துறையர்வாழ் வாதா ரத்தை?..

வரைவினை எமக்குக் காட்டு:
      வாய்ச்சவ டால்நிப் பாட்டு!
அறையினில் நடப்ப தென்ன?
         அம்பலம் அறியக் காட்டு!
முறையிலா நீதி யொன்றை
         முன்னிலைப் படுத்து கின்ற
துறைமுகத் திட்டம் யாரைத்
         தொலைப்பதற் கென்று காட்டு!..

பதவியைத் துறப்பே னென்றும்
         பார்க்கலாம் ஒருகை யென்றும்
உதறலோ(டு) உளறும் போக்கால்
         ஒருபருப் பும்வே காது..
மதவெறிக் கள்ளை யூட்டி
         மறுபடி எங்கள் மண்ணில்
விதவிதக் குழப்பம் செய்ய
         விரும்பினால் அதுதே றாது!..

அலைகள்வந்(து) எங்கள் வீட்டை
         அடிக்கடி இழுத்துச் செல்லும்
நிலைமைநீர் கண்டி ருந்தும்
         நினைத்திரோ எம்மைப் பற்றி?..
குலைகுலை யாக 'நோட்டு'
         கொட்டிடும் "ஹார்பர்" மட்டும்
மலையென மனதில் வைத்தீர்:
         மானுடம் எங்கே வைத்தீர்?..

இரக்கமில் லோரே, நீங்கள்
         எமைவிட்டு விலகிப் போங்கள் :
அரக்கரே, ஆழி மைந்தர்க்(கு)
         அல்லலே நினைக்கின் றோரே,
உரக்கநீர் கூவிக் கூவி
         உழைப்பதை நிறுத்திக் கொள்க:
பரக்கவே கிடக்கும் நெய்தல்
         படுகையின் உரிமை வாழ்க!!..

விரைந்திடு, வெண்சங்கே!











அசையாமல் அமர்ந்திருக்கும் ஆழிவெண்சங்கே - உன்னை 
          ஆர் இங்கு அனுப்பி வைத்தார் ஆழிவெண்சங்கே?..
திசைமாறி வந்தனையோ ஆழிவெண்சங்கே? - உனக்குச்
      சேதியொன்று சொல்ல வேண்டும்  ஆழிவெண்சங்கே!..

கடலுக்குள் நடப்பதென்ன ஆழிவெண்சங்கே? - எங்கள்
     கணணீரை யாரறிவார் ஆழிவெண்சங்கே?..
திடல்விட்டுத் திரைக்குள்ளே  சென்றுவா சங்கே - எங்கள்
     செந்தமிழ் மீனவர் துயரம் கண்டுவா சங்கே!..

மீன்பிடிக்கச் செல்லுகின்றோம் ஆழிவெண்சங்கே - எம்மை
      மிருகங்கள் மேய்வது ஏன்,  ஆழிவெண்சங்கே?..
ஊன்பசிகொண்(டு) அலைகின்ற  ஓநாய்க் கூட்டம் - செய்யும் 

      உபத்திரவம் ஒழிவ(து) என்றோ ஆழிவெண்சங்கே?..

வலையறுத்து மீனெல்லாம் கடல்தனில் வீசிச் - சுற்றி
      வளைத்து சிறைப்படுத்துதல்தான்நடக்குது சங்கே!
அலைகடலின் அடல்மறவர்அடிமைகள் என்றே - எங்கள்
      அரசாங்கம் நினைக்கிறதா ஆழிவெண்சங்கே?..

கடிதத்தை எழுதுகின்ற  கடமையில் மட்டும் - இங்குக்
     கடுகளவும் குறைவில்லை  ஆழிவெண்சங்கே..
துடிதுடிக்கும் மீனவர்க்கோ  ஒவ்வொரு நாளும் - கடலில்
      தொடருவது சோகமன்றோ ஆழிவெண்சங்கே?.

படகுகளை இழந்து நிற்கும் பரதவனிங்கே - வெறும்
      பாய் கொண்டா மீன்பிடிப்பான்ஆழிவெண்சங்கே?..
அடம்பிடித்துத் தர மறுக்கும் சிங்களத்தானுக்(கு) - இந்த
      அரசாங்கம் அஞ்சுவதேன் ஆழிவெண்சங்கே?..

வெண்ணுரையைத் தழுவி உடன் விரைந்திடு சங்கே - நீந்தி
      வெட்டுக்கும் விலங்காலே சென்றிடு சங்கே..
கண்ணெதிரே சிங்களனைக் கணடிடு சங்கே - அந்தக்
      காடையன் மூஞ்சியில் காறி உமிழ்ந்திடு சங்கே!!..

சுமைதாங்கிப் பூனையார்..



அமைதியாய்க் கோழிக் குஞ்சை
        அமர்ந்திடச் சொல்லி, எம்முன் 
சுமைதாங்கி வேஷம் போடும்
        சுட்டியாம் பூச்சைக் குட்டீ!
இமைகளால் கண்டோம்: குஞ்சின்
        இடதுகால் ஊனம் என்று..
எமையினி ஏமாற் றாதே:
        இறக்கிவை அதனைக் கீழே!..

மலையருவி மங்காய்!







மன்னித் தருள்வாய், மலையருவி மங்காய்!நான்
உன்னைப் பருகவந்த(து) உண்மைதான் - என்னைநீ
இப்படியே வாயோ(டு) இறுகணைத்து முத்தமிட்டால்
எப்படிநான் போவேன்வீட் டிற்கு?..

அன்னைக்கோர் அஞ்சலி!


கரங்களில் ஏந்திய தீபம் - அது
காட்டுது தாய்மையின் வேதம்.. 
திறம்படும் ஆட்சியின் தொடக்கம் - அன்னை
தெரசாவிற்(கு) ஒரு வணக்கம்!..

அரசியல் பாதையின் பயணம் - இதில்
அன்னையின் ஆசியும் வரணும்..
தரமிகு பணிகளை ஆற்ற - அந்தத்
தலைவியின் துணைதனைப் பெறணும்!..

காண்பதற்(கு) அரியதோர் காட்சி - இது
காலம் தரும் சின்ன சாட்சி..
மாண்புடை முதல்வர் மம்தா - வங்க
மண்ணில் காண்க நல்லாட்சி!..

அஞ்சலி என்பது இதுதான் - இதற்(கு)
ஆயிரம் உள்ளது பொருள்தான்:
நெஞ்சினில் அன்னையின் தியாகம் - நின்று
நிலைத்திடில் மலைகளும் பனிதான்!!..

கனிச்சுவை!. தனிச்சுவை!..


வித்தினை மறைத்தி டாமல் 
வெளியிலே தெரியக் காட்டிக்
கொத்துகொத் தாகத் தொங்கும் 
கொல்லாம்ப ழங்காள்! நீவிர்
எத்தனை நாள்கள் இன்னும்
எங்களை மறந்தி ருப்பீர்?..
ஒத்தைம ரத்துக் கொம்புக்(கு)
ஒருவிடை தரமாட் டீரோ?..

பண்டைய நாளில் எங்கள்
பள்ளம்ஊர்ப் பெருந்து றைக்கும்
அண்டையில் விளைக ளுக்குள்
அடர்த்தியாய்க் காய்த்தி ருந்தீர்..
கண்டதும் குறிதப் பாது
கல்லெறிந்(து) உம்மை வீழ்த்தி
உண்டதை நினைக்கும் போழ்தில்
ஊறு(து)உம் பழச்சு வைதான்!..

கடல்குளிக் கையிலே கொல்லாங்
கனிகளை விட்டெ றிந்(து),எம்
உடலொடு கனிக ளுக்கும்
உப்புநீர்க் குளியல் தந்து,
மடமட வென்று வெள்ளை
மணல்மிசை வந்த மர்ந்து,
படபட வென்று தின்ற
பழச்சுவை தனிச்சு வைதான்!..

முந்திரிப் பருப்பு காயும்
முன்னமே அறுத்துத் தின்னும்
தந்திரம் அறிந்த நானும்
தம்பிமார் பலரும் நீண்ட
தொந்தர(வு) இழைக்க, எம்மைத்
துரத்திய நாடான் மாரை
இந்தநே ரத்தில் கூட
எண்ணிடில் நகைச்சு வைதான்!..

குமரிமா வட்ட மெங்கும்
கொல்லாம்ப ழத்தின் ஆட்சி..
எமதுமண் வாச னைக்குள்
என்றும்கொல் லண்டி வீச்சி..
நமதுநாட் டிற்குக் காசு
நல்கிடும் முந்தி ரிக்குத்
தமிழனின் புதிய ஆட்சி
தரட்டும்ஓர் தகுந்த நீதி!!..

மழைமேகம், தமிழ் மேகம்!



மழைமேகம் மழைமேகம்
மலைமேலே மழைமேகம்..
மலைவளமிகு மலைமகளொடு
மளமளவென இழைமேகம்!...

இழைமேகம் இழைமேகம்.. 

எழிலுடனே திகழ்வதனால்
"எழிலி"யெனப் புலவோர்கள்
அழைமேகம் அழைமேகம்!...

அழைமேகம் அழைமேகம்..
அடைமழையை எதிர்பார்த்து
விளைநில வேளாண் மாக்கள்
விழைமேகம் விழைமேகம்!...

விழைமேகம் விழைமேகம்..
விசும்பின் தேன்துளி பெற்றுப்
பசும்புல்லின் தலைகாத்தற்(கு)
உழைமேகம் உழைமேகம்!...

உழைமேகம் உழைமேகம்..
ஊருக்குத் 'துப்(பு)' ஆக்கித்
தப்பாது பணியாற்றித்
தழைமேகம் தழைமேகம்!...

தழைமேகம் தழைமேகம்..
தலையாய தவமேகம்:
தளை,தொடையொடு நடமிடுகவித்
தமிழ் மேகம்.. அம்மம்மா!!...

கைக்குள் வள்ளுவன்

கடலேழைக் கட்டிக் கடுகுக்குள் வார்த்த 
அடல்பாணன் வள்ளுவனை அண்டி - மிடல்சிறுமி
தன்னிருகைக் குள்வார்க்கும் தைரியத்தை என்சொல்ல! 
என்னிருந்தும் காட்சி எழில்!..



கதிரவனே, கண்ணுறங்கு!


நீலவான் போர்வைக் குள்ளே
           நித்திரை கொள்ளச் செல்லும் 
கோலமஞ் சள்வட் டத்துச்
           சூரிய விளக்கே, நின்றன்
காலம்இன் றோடு மாலை
           கடந்ததை அறிந்து கொண்டேன்:
கீழைநீ நாளை தோன்றும்
           கெடுவரை கண்ணு றங்கு!!..

நிமிர்ந்து நில்!!



இத்தாலி நாட்டினன்ஓர் கோபு ரத்தை
         எழுப்பிவைத்துப் புகழ்கண்டான் பலநூ றாண்டு..
முத்தமிழின் சோழனும்தன் மண்ணில் விண்ணை
        முட்டுகின்ற கோவில்ஒன்றை எழுப்பி வைத்தான்..
நற்றமிழன் எழுப்பியகல் பழசா னாலும்
          நகராமல் நிமிர்ந்துநிற்கும் பீடு காண்மின்..
பித்தலாட்டம் கொண்டதமிழ் நெஞ்சம் மட்டும்
         பீசாவின் கோபுரம்போல் சாய்ந்த தம்மா!!..

மே 18





தென்னிலங்கைத் தமிழுறவின் தியாக தீபம்..
என்னிதயத்(து) ஏழாண்டாய் எரியும் தீபம்..
கண்ணிழந்த கயவர்களைக் காட்டும் தீபம்..
தன்இனத்தைத் தமிழன்நினை வூட்டும் தீபம்!!..

சிங்களத்துக் கழுகுகளின் செந்நீர்த் தாகம்
நம்குலத்தை மேய்ந்ததனை நவிலும் தீபம்..
வெங்களத்தில் விதையான வெற்றித் தூண்கள்
தங்களது தனித்துவத்தைத் தாங்கும் தீபம்!!..

இந்தியனின் வஞ்சகத்தை இயம்பும் தீபம்..
சிந்தியசெங் குருதியுடன் சிரிக்கும் தீபம்.
நம்தினவுத் தோள்களுடன் நடக்கும் தீபம்..
வெந்திடினும் வெஞ்சினத்தை விளக்கும் தீபம்!!  

உண்ணுங்கள், சீக்கிரம்!













முந்திரியக் கொத்துவளும் மூணுசுடு சாயாவும் 
பந்தியிலே வச்ச பழரோஸ்டும் - தந்திருக்கும்
நல்வடையும் உண்ணுங்கள் நண்பர்களே, ஓட்டுபோடச்
செல்வதற்கு முன்:சீக் கிரம்!..

பிறந்தநாள் வாழ்த்துகள்


செல்வமாம் எங்கள் பேரன், 
        "திருச்சுடர்" என்னும் பேரன்.. 
பல்வகைச் சிறப்பி னோடு
        பன்னிரண்டாம் வயது கண்டான்..
கல்வியும் கலைகள் யாவும்
        கடவுளின் கருணை யாலே
நல்விதம் அவனைச் சேர
        நற்றமிழ் வாழ்த்துச் சொல்வோம்!!..


அன்புடன்,
தாத்தா மற்றும் பாட்டி..

என்னடா செய்வாய்?


ஆழநீர் நாட்டுக் குள்ளே
       அதிரடி ஆட்டம் போடும்
ஏழடிப் பச்சைப் பாம்பே! 
       என்னடா செய்வாய், என்னை?..
நீலவான் நாட்டுக் குள்நான்
       நிரந்தர வேட்டைக் காரன்..
வாலைநீ சுழற்ற வேண்டாம்:
       வந்தி(டு)என் கூடே மேலே!..

நெடும் பனை!..



சோ(று)இடும் வயல்கள் சூழ்ந்து 
      சுற்றமாய் உறவு கொள்ள, 
வேறிடம் எங்கும் காணா
      வெள்ளநீர் விருந்து செய்ய,
"ஆரிடம் உள(து)என் னைப்போல்
      அதிர்ஷ்டம்?"என்(று) அகம்பூ ரித்துக்
கூறிடும் நெடும்ப னைக்குக்
      கொடுக்கலாம் முதல்வ ணக்கம்!..

சின்ன அன்னை திரேசா.



சின்ன அன்னையே திரேசம்மா - நீ
       செல்வ(து) எங்கு? சொல், திரேசம்மா.. 
உன்னைக் கண்டதும் நெஞ்செல்லாம் - புது
       உவகை பொங்குதே திரேசம்மா..

கச்சை மீதினில் ஜெபமாலை - வைத்த
       காரணம் என்ன திரேசம்மா?
இச்சனங்கள் படும் வேதனையை - எண்ணி
       இறையை வேண்டவோ, திரேசம்மா?..

தேர்தல் நாடகம் தொடங்கியதே - அது
       தெரியுமா, சின்ன திரேசம்மா?
ஊர்கள்தோறும் பொய் வாக்குறுதி -பல
       உலாப் போகுதே, திரேசம்மா!..

மாறி மாறி வசை பாடுகின்றார் - இந்த
       மக்கள் யார் பக்ககம் ஓடுகின்றார்?.
தேறியவர் யாரும் இல்லையம்மா - இதை
       சிலுவை இயேசுவிடம் சொல்லிடம்மா!..

ஏழை பாழைகள் இவரம்மா - இங்கு
       எந்தக் கட்சிதான் சரியம்மா?
கூழைக் கும்பிடுகள் போடுகின்ற - தமிழ்க்
       கோழைகளுக்(கு) என்று முடிவம்மா?..

சென்று வா சின்ன திரேசம்மா - ஒரு
       சின்ன புன்னகையை வீசம்மா..
நன்று நடக்கட்டும் தேர்தலம்மா - அது
       நாட்டு மக்கள்தம் ஆவலம்மா!!..

வண்ணமலர்க் கொத்துச் சிரிப்பு: குறுஞ்சிரிப்பு !!


முத்துச் சிரிப்பு: முகையவிழ்ந்த வண்ணமலர்க்
கொத்துச் சிரிப்பு: குறுஞ்சிரிப்பு - அத்திமரக்
காட்டில் கமழும் கனிச்சிரிப்(பு):இக் காட்சியைநான் 
ஏட்டில் வடிப்பதற்(கு)ஏல் இல்!!..

.பாரதி தாசன் - "சுடர்தந்த தேன்!"



"சுடர்தந்த தேன்!"என்று தமிழைச் சொன்ன
         சுப்புரத்னம் நினைவுண்டோ? சொல்லாய், தோழா!.. 
மிடல்சான்ற கவிமறவன் அவன்போல் இந்த 
         மேதினியில் ஒருவனுண்டோ? உரைப்பாய் தோழா!.. 
"உடனேநீ விழி,தமிழா!" எனும்போர்ப் பாட்டை
         உரக்கமுழங் கியபுதுவைக் குயிலின் ஓசை,
மடத்தமிழன் காதுகளின் மடலை இன்னும்
         மருவவில்லை: இதுவென்ன மாயம், தோழா?. 

நாடக முத்திரை...



கும்மியடி பெண்ணே கும்மியடி - இது
கும்பிடும் கையென்று கும்மியடி.. 
நம்மிடையே வந்து கண்ட கதை சொல்லும் 
நாடக முத்திரை.. கும்மியடி!..

தேர்தல் வந்ததடி கும்மியடி - இந்த
தேசம் வெந்ததடி கும்மியடி..
ஆர்முன்னும் அச்சமின்றிப் பிச்சை எடுக்கும்
அன்புச் சின்னம் இது, கும்மியடி!..

வாக்குறுதி தரும், கைகளடி - நம்மை
வணங்கிடும் வேஷக் கைகளடி..
வாக்கு கிடைத்ததும் மறந்து போகும்தம்
வார்த்தைகளை, என்று கும்மியடி!.. 


ஆறு முனைகளில் தேர்தலடி - இங்(கு)
அனைவர்க்கும் நாற்காலிக் காதலடி..
சோறு போடுபவன் யாரென்று காணாது
சொல்வதென்ன என்று கும்மியடி!.. 


நல்லவனைக் கண்டு கும்பிடடி - அவன்
நாடாளட்டும் என்று கும்மியடி..
வெல்லுபவன் இனி ஊழலின்றி ஆள
வேண்டும் என்று சொல்லி கும்மியடி!!...

சனி, 16 ஜூலை, 2016

தலையிலே மகுடம்

பூமியின் பச்சை மேனி 
        போர்த்திய கறுப்பு மேனி.. 
நாமினி உண்ணற்(கு) என்றே
        நாற்றுநட்(டு) அதனைப் பேணித்
தீமிதி வெயிலும் தாங்கும் 
        திறத்துடன் இருக்கின் றான்,பார்:
சாமியை நிகர்த்த வன்போல்
        தலையிலே மகுடம் சூடி!..

பனையோலைச் சிற்பம்

பனையோலைச் சிற்பம் படைத்தவன் தன்கை
வினையாலே தான்படைத்தான் விந்தை - நினைவாலே
வெட்டுக் கிளியை விரட்ட முனைந்தாலும்
எட்டநின்று துய்த்தேன் எழில்!..


"உணவருந் திடவா ரீர்!

மணல்வெளி மீ(து)அ மர்ந்து 
         மற்றுமோர் விருந்(து)அ மைத்து 
"உணவருந் திடவா ரீர்! "என்(று)
         உலகினர் தமைஅ ழைக்க
வனைந்தசிற் பத்தின் மீது 
         வாஞ்சைகொண் டதனால், தான்தன்
புனலொடு புறப்ப டாமல்
         பொறுமைகாக் கின்றாள் ஆழி!..