
பச்சிலைகள் சூழ, பலபூக்கள் ஆங்காங்கே
மெச்சிநின்ற வாறேதம் மெய்சிலிர்க்க - எச்சில்தனை
ஊறவைத்து, கொய்தற்(கு) உடனே எனைமரத்தில்
ஏறவைத்த தோட்டம் இது.
தித்திக்கும் செங்கனிகள் தீயின் பிழம்புகளாய்
எத்திக்கும் தொங்கும் எழிழ்கண்(டு)என் - புத்திக்குள்
போதைப் படலம் புகுத்தியது, நான்செல்லும்
பாதைநின்ற கொல்லா மரம்.
தென்னைமரத்(து) ஈர்க்கில் செருகியகொல் லாம்பழத்தை
முன்னையெம் பள்ளம் முதுவூரில் - பொன்நிகர்மீன்
கொண்டு,பண்ட மாற்றுக் கொடுத்த நினைவுகளைக்
கொண்டுவரும் கொல்லாம் பழம்.
உப்பை உறிஞ்சிக் கடல்நீரை உள்வாங்கி,
நட்புபகிர்ந் தாற்போல் நனைந்துபட்டு - செப்பமுடன்
ஆழிமணல் மேட்டில் அமர்ந்துண்ட என்நினைவின்
நாழிசொல்லும் நல்ல பழம்.
நள்ளிரவில் நண்பனுடன் நாடான் விளைபுகுந்து
கள்ளமிட்(டு) உண்ட கனிபோக - கொல்லண்டி
சேர்த்தெடுத்(து) ஓடித் தெருமுனைக்கு வந்ததெலாம்
கோர்த்துதரும் கொல்லாம் பழம்.
பச்சைக்கொல் லண்டிப் பருப்பினைப் பால்களையா(து)
இச்சையுடன் தின்ன, இதழ்முழுதும் - நச்சினைப்போல்
பொள்ளிப் படர்ந்திருந்த புண்ணின் நினைவெல்லாம்
சொல்லுகின்ற கொல்லாம் பழம்.
மண்ணில் புதைத்து மறுநாள் அதைஎடுத்து
கண்ணில் படாதவாறு கள்ளருந்தி - எண்ணில்லாச்
சேட்டை புரிந்த சிறுவயது நாள்களைமுன்
காட்டியது இந்தக் கனி.
ஊரவர்க்கும் உற்றார் உறவினர்க்கும் தேனார்ந்த
சா(று)உவக்கும் நாஞ்சில் சரித்திரம் - வேறெவர்க்கும்
இல்லாத இன்பமெலாம் ஈந்(து),என் நினைவுகளைக்
கொல்லாத "கொல்லா"ம் பழம்!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக