
தென்தமிழ் மேற்குத் திரைகடல் ஓரத்தில்
கண்கவர் தோற்றத்தில் காட்சிதரும் - குன்றுகளில்
ஒற்றைப் பெருங்கல்லாய் உட்கார்ந்(து) இருக்கும்
கற்றூணாம் கும்பாரிக் கல்.
உச்சிவரை எப்படியோ ஊர்ந்த நினைவுகளை..
கச்சிதமாய்ப் பட்ட(ம்)விட்ட காலத்தை - அச்சமின்றி
நண்பரொடு நின்று நடுவானம் நோக்கியதைக்
கொண்டுவரும் கும்பாரிக் கல்.
சறுகியதும், என்றன் சகநணபர் அப்போ(து)
அருகிருந்து காத்த அறமும் - மறுபடியும்
கூட்டத்தோ(டு) ஏறிக் கொடியசைத்த பேரழகும்
காட்டிநிற்கும் கும்பாரிக் கல்.
கச்சான் அடித்தாலும் உப்புக் கரித்தாலும்
மச்சான் மடிதள்ளச் சொன்னாலும் - உச்சி
பிடித்துப்போய் வீணாய்ப் பிடிவாதம் செய்த
கடிகையூர்க் கும்பாரிக் கல்.
தெக்குகடல் ஓசையிட, தேன்தமிழின் பாட்டறிந்த
முக்குவர்தம் பாடல் முழக்கமிட - மக்கள்
முடியுமட்டும் கேட்கவைத்த முந்தையர் நெய்தல்
கடிகைநகர் கும்பாரிக் கல்.
நாலைந்து கல்லோடு நல்லுறவாய் நணபனைப்
போலமர்ந்த தோற்றப் பொலிவுகண்டு - சேலளந்த
ஊரவரும் 'கும்பாரிக் கல்'லென்(று) ஒருபெயரைக்
கூறவரும் கொள்ளையெழில் கல்!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக