Tamil

வியாழன், 15 செப்டம்பர், 2016

கண்டதுண்டா?..


உருண்(டு)உருண்டு உறுமிவரும் கடல்விளிம்பில் - எங்கள்
உடைமைகளின் திருப்பயணம் தொடங்குது,பார்:
பறந்துசெல்லக் காத்திருக்கும் படகினைத்தான் - அலைகள்
பாய்ந்துவந்து சித்ரவதைப் படுத்துது,பார்!..

கடல்நெடுகே பெரும்பயணம் செல்வதற்கும் - எந்தக்
காற்றினுக்கும் பதில்கூறிப் பாய்வதற்கும்,
உடன்இருக்கும் அடல்மறவர் உழைப்பதற்கும் - என்றும்
உற்றதொரு வாகனமாம் படகினைப்பார்!..

நீரோட்டம் கண்டுவலை இளக்குதற்கும் - சுற்றி
நீவாடு பார்த்துமடி வளைப்பதற்கும்,
யாரோடும் எப்போதும் அருகிருக்கும் - எங்கள்
யாத்தினத்துக் காவலனின் நிலைமையைப்பார்!..

எங்கெல்லாம் கடல்ஆழம் உள்ளதென்றும் - நாங்கள்
எவ்விடத்தில் மீன்வேட்டம் புரிவதென்றும்,
எங்களுக்குத் தெரிவிக்கும் நண்பனுக்கே - அலைகள்
இடர்செய்து தடுக்கின்ற காட்சியைப்பார்!..

தடுத்திடினும் தலைகீழாய் நிறுத்திடினும் - நாங்கள்
தள்ளுகின்ற யாத்தினங்கள் தடைபடினும்,
அடுத்தடுத்து மீனவர்கள் முயல்வதைப்பார் - மிடல்சால்
அடல்மறவர் கடற்பரப்பில் நுழைவதைப்பார்!..

கடற்பரப்பில் எம்மவர்கள் நுழைந்துவிட்டால் - வீரக்
கவசமென விளங்குவ(து)இப் படகுதானே?
இடம்வலம்எல் லாம்அறிந்து கொள்ளுதற்கும் - கடலில்
ஏற்றதொரு கருவியும்இப் படகுதானே?..

ஆழிபடு திரவியங்கள் அத்தனையும் - நெய்தல்
அரையர்களை அல்லா(து)இங்(கு) ஆரறிவார்?
நாழிதொறும் படகினையே பயன்படுத்திப் - பெற்ற
ஞானமிந்த ஞாலமதில் யார்பெறுவார்?..

துறைமுகத்தைக் கொண்டுவரத் துடிப்பவனே - நீஓர்
துளியேனும் எம்கருத்தைக் கேட்டதுண்டா?
கரையோரம் கடல்யுத்தம் நடத்துகையில் - நாங்கள்
கண்டதுண்டம் ஆவதனைக் கண்டதுண்டா?.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக