
ஆறுகளே! நாட்டுக்(கு) அணிகலனாய் வாய்த்திருக்கும்
பேறுகளே! உம்மால் பெருந்துயரே - வீறுகொளாக்
கோழைத் தமிழோர் குறைபா(டு) அறியாதே
நீள நடக்கின்றீர் 'நீர்'!..
நன்னடத்தைக் கன்னியாம் நற்றமிழர்க் காவிரியைக்
கன்னடத்தார் கைப்படுத்திக் காட்டுகின்றார்: - இந்நடத்தை
ஏற்புடைத்தோ? என்(று)எழும்பும் எம்மோர் குமுறலெல்லாம்
கேட்பதுண்டோ உங்கள் செவிக்கு?..
பாலாற்றை எம்கண்முன் பாழ்ஆறாய் ஓடவைக்க
ஆலாய்ப் பறக்கின்றார் ஆந்திரத்தார் - நூலாய்
இளைக்கும் உழவர்தமை ஏறெடுத்தும் பாராப்
பழிக்(கு)இங்கே என்ன பதில்?..
நீலகிரி ஈன்றெடுத்த நீர்மழலை, எம்நிலத்துள்
சீலமுடன் ஓடும் சிறுவாணிக்(கு) - ஊழல்மிகு
கேரளத்தான் கூடச் செறுப்(பு)அணையைக் கட்டுதற்(கு)
ஆரளித்தார், அஞ்சாத் திமிர்?..
மழைநீர் பெருகின் மதகுதிறக் கின்றார்..
பிழைவானம் பொய்க்குங்கால் பேணார் - விளைநிலமோ
வெட்டவெளி ஆனபின்பும் வெள்ளம்தா ரார்:நீவிர்
உற்றபுகழ்க்(கு) உண்டோ பொருள்?..
நதிநீர்ப்பங் கீட்டு நடுவர்மன்றம் இன்(று)ஓர்
பொதிசுமக்கும் நல்விலங்காய்ப் போயிற்(று): - எதுசொலினும்
கேட்காது: தீர்ப்பும் கிடைக்கா(து): உரிமைகளை
மீட்கவழி வேறுண்டோ, மேல்?..
எம்மவர்க்(கு) எட்டும்நீர் எட்டா(து) இடைமறித்து,
தம்மவர் போக்கில் தடுப்பணைகள் - வன்முறையாய்க்
கட்டுகின்றார் ஆந்திரரும் கர்நா டகத்தாரும்:
கெட்டவரை யார்கேட் பது?..
முலைசுரந்து பால்வார்க்கும் முன்னறிதெய் வம்போல்
அலைசொரிந்(து) எம்கூழ் அளக்கும் - விலைகடந்த
ஆறுகளே! நீவிர் அறமற்றுப் போவீரேல்
ஆறுதலாய் எம்மவர்க்(கு)இங்(கு) ஆர்?..
*******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக