
(ஆசிரியப்பா)
ஒற்றை மலரே, ஒற்றை மலரே,
சுற்றிய புல்நுனி பற்றிய பனித்துகள்
முற்றிலும் நோக்கிடும் ஒற்றை மலரே!..
சற்றொரு தருணத் தேனும் நினதுசெந்
நெற்றிமீ தமர்ந்தொரு நித்தில தரிசனம்
உற்றிலா தென்னென உருகிடப் போந்தனை
நற்றிறம் கற்றிலா ஒற்றை மலரே!..
ஒவ்வொரு நுனிப்புல் பனித்துளி உமிழ்ஒளி
செவ்விய ஞாயிறின் சிதறல் என்பதை
எவ்விதம் மறந்தனை, என்னரும் மலரே?..
கவிழ்ந்தது போதும்: கண்விழி, மலரே!..
நிமிர்ந்துபார்: முகிலிடை நிற்பவன் கதிரே!..
அறிந்தனை கொல்?சொல், மலரே:
ஆர்தான் பனித்துளிக்(கு) அருளியோன் என்றே!..
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக