
தென்குமரிப் பள்ளம் ஊரில்
திரையலையின் வெள்ளத் தேரில்
பொங்கிவரும் மீன்பி டிக்கப்
பூட்டிய கம்பால் - தென்னைத்
தங்கநிறச் சவுரி பெய்து,
தக்கபடி முறுக்கி, எம்மோர்
செங்கரங்கள் இழுப்ப தற்குத்
தீட்டிய கம்பால்!..
நீலநிறக் கடல்வி ளிம்பை
நிலக்கரையோ(டு) இணைத்துக் கட்டிப்
பாலமெனப் பயன்வி ளைக்கும்
பண்டைய கம்பால் - கரையின்
சேலளந்த கெட்டிக் காரர்
சீரளந்த வரிசை கட்டி,
நாலடிநா டோடிப் பாடல்
நடத்திய கம்பால்!.
கட்டுமரம் கடலில் காண,
கயிறுவடம் தரையில் காண,
தட்டுமடி வளப்பு காணும்
கரமடிக் கம்பால் - வெண்மைப்
பட்டுமணல் விரிப்பில் நின்று
பாட்டுமணம் பரப்பும் ஆழிச்
செட்டிகுலம் சேர்ந்(து)இ ழுக்கும்
சித்திரக் கம்பால்!..
வெட்டுகடல் வெலங்கே வெள்ளி
வெட்டமிடும் வேளா மீனைக்
கட்டுதற்(கு)எம் ஆ(ண்)வீ ரன்மார்
காட்டிய கம்பால் - மேளம்
கொட்டுகிற குருகும் கொக்கும்
கூட்டமொடு குலவை யிட்டுக்
கொட்டமடிப் பதனைக் காணக்
கூட்டிய கம்பால்!..
வட்டமுறச் சுழற்றிப் போட்டு
வலியவடத் தலக்கைக் காரன்
எட்டநின்று மீனைக் காணற்(கு)
இணங்கிய கம்பால் - ஈரம்
பட்டவுடல் தளர்ந்தி டாமல்
பழக்கமுடன் இழுக்கும் காட்சி
கிட்டநின்று பார்த்துப் பார்த்துக்
கிறங்கிய கம்பால்!..
வெண்ணுரையின் திடலைத் தேடி
விரைந்துமடிக் குள்ளே மீன்கள்
பண்ணுகிற விளையாட் டெல்லாம்
பார்த்திடும் கம்பால் - நெய்தல்
மன்னவர்தம் மீன்பா டெல்லாம்
மண்ணுலகில் காணக் காண
மகிழ்ச்சியென மனதால் எம்மை
வாழ்த்திடும் கம்பால்!..
முக்குவர்தம் ஒற்று மைக்கும்
முதியதமிழ்ப் பண்பாட் டிற்கும்
பக்குவமாய்ச் சான்று கூறும்
பரம்பரைக் கம்பால் - இந்தத்
தெக்குதிசை மக்கள் மீது
திணித்துவிடும் சதியை வீழ்த்தும்
சின்னமெனத் திகழும் எங்கள்
சிந்தனைக் கம்பால்!..
துறைமுகத்தைத் திணிக்கப் பார்க்கும்
சொந்தபுத்தி இல்லா தாரின்
கறைமுகத்தைக் கண்டு பொங்கும்
கரமடிக் கம்பால் - தீயோன்
மறைமுகமாய் எதுசெய் தாலும்
மடிக்குள்ளே வீழ்த்தி, மாற்றான்
அரைமுகத்தை அறிய வைக்கும்
அதிரடிக் கம்பால்!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக