
மண்ணகத் தேமா வேலி
மன்னவன் வருவான் என்னும்
எண்ணமோ(டு) ஒவ்வோர் ஆண்டும்
இனியகே ரளத்தின் மாந்தர்
பொன்ஓணம் விழாக்கொண் டாடிப்
பூரித்(து)இ ருக்கும் இந்நாள்
கண்ணினுக்(கு) இனிய காட்சி:
களிப்பொடு வாழ்த்துச் சொல்வோம்!..
முன்றிலில் அத்தக் கோலம்:
முரசுகள் முழங்கும் மேளம்:
தென்றலில் ஆடும் ஓணத்
தீஞ்சுவைப் பாட்டுத் தாளம்:
நன்றுடன் வரிசை கட்டி
நடமிடும் மலையா ளத்துப்
பெண்டிர்தம் தம்பு ராட்டிப்
பேரழ(கு) ஒளிரும் ஓணம்!..
ஊஞ்சலில் ஆடு கின்றார்
உற்சவத் தேவ தைமார்..
தேன்சுவை விருந்து வைத்துச்
சேச்சிமார் அசத்து கின்றார்..
"யாம்சளைத் தவர்அல் லோம்!"என்(று)
யாங்கணும் பொருள்சென்(று) ஈட்டும்
நாஞ்சில்நன் னாட்டா ருக்கும்
நல்லபொன் ஓணம் இன்று!..
பொன்னுகே ரளத்தி லுள்ள
புண்யகோ டிகள்க்(கு)இந்(நு) என்டே
சின்னதோர் அபேட்ச யுண்டு:
சிறுவாணி யினைச்செ றுத்து
பின்னொரு அணகட் டண்டா:
பிரஸ்னமொந்(நு) உண்டாக் கண்டா:
அன்(னி)யன்டே கூட்டு நிங்ஙள்
அவசரப் பெடலும் வேண்டா!..
உலகெலாம் மலையா ளத்தார்
ஓணநாள் கண்ட போதும்,
பலகாலம் தமிழ்நாட் டாரும்
பழகிவந் துள்ளார் ஓணம்:
நலமுடன் நாமும் சொல்வோம்
நண்பினர்க்(கு) ஓணம் வாழ்த்து!
வளமுடன் நீடு வாழ்க,
வள்ளங்க ளியின்பொன் ஓணம்!..
*******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக