Tamil

வியாழன், 15 செப்டம்பர், 2016

ஒற்றை மலரே, நிமிர்ந்து பார்!..


(ஆசிரியப்பா)

ஒற்றை மலரே, ஒற்றை மலரே, 
சுற்றிய புல்நுனி பற்றிய பனித்துகள்
முற்றிலும் நோக்கிடும் ஒற்றை மலரே!..

சற்றொரு தருணத் தேனும் நினதுசெந்
நெற்றிமீ தமர்ந்தொரு நித்தில தரிசனம்
உற்றிலா தென்னென உருகிடப் போந்தனை
நற்றிறம் கற்றிலா ஒற்றை மலரே!..

ஒவ்வொரு நுனிப்புல் பனித்துளி உமிழ்ஒளி
செவ்விய ஞாயிறின் சிதறல் என்பதை
எவ்விதம் மறந்தனை, என்னரும் மலரே?..

கவிழ்ந்தது போதும்: கண்விழி, மலரே!..
நிமிர்ந்துபார்: முகிலிடை நிற்பவன் கதிரே!..
அறிந்தனை கொல்?சொல், மலரே:
ஆர்தான் பனித்துளிக்(கு) அருளியோன் என்றே!..

******

ஆறுகளே!.. நாட்டின் பேறுகளே!..


ஆறுகளே! நாட்டுக்(கு) அணிகலனாய் வாய்த்திருக்கும்
பேறுகளே! உம்மால் பெருந்துயரே - வீறுகொளாக்
கோழைத் தமிழோர் குறைபா(டு) அறியாதே
நீள நடக்கின்றீர் 'நீர்'!..

நன்னடத்தைக் கன்னியாம் நற்றமிழர்க் காவிரியைக்
கன்னடத்தார் கைப்படுத்திக் காட்டுகின்றார்: - இந்நடத்தை
ஏற்புடைத்தோ? என்(று)எழும்பும் எம்மோர் குமுறலெல்லாம்
கேட்பதுண்டோ உங்கள் செவிக்கு?..

பாலாற்றை எம்கண்முன் பாழ்ஆறாய் ஓடவைக்க
ஆலாய்ப் பறக்கின்றார் ஆந்திரத்தார் - நூலாய்
இளைக்கும் உழவர்தமை ஏறெடுத்தும் பாராப்
பழிக்(கு)இங்கே என்ன பதில்?..

நீலகிரி ஈன்றெடுத்த நீர்மழலை, எம்நிலத்துள்
சீலமுடன் ஓடும் சிறுவாணிக்(கு) - ஊழல்மிகு
கேரளத்தான் கூடச் செறுப்(பு)அணையைக் கட்டுதற்(கு)
ஆரளித்தார், அஞ்சாத் திமிர்?..

மழைநீர் பெருகின் மதகுதிறக் கின்றார்..
பிழைவானம் பொய்க்குங்கால் பேணார் - விளைநிலமோ
வெட்டவெளி ஆனபின்பும் வெள்ளம்தா ரார்:நீவிர்
உற்றபுகழ்க்(கு) உண்டோ பொருள்?..

நதிநீர்ப்பங் கீட்டு நடுவர்மன்றம் இன்(று)ஓர்
பொதிசுமக்கும் நல்விலங்காய்ப் போயிற்(று): - எதுசொலினும்
கேட்காது: தீர்ப்பும் கிடைக்கா(து): உரிமைகளை
மீட்கவழி வேறுண்டோ, மேல்?..

எம்மவர்க்(கு) எட்டும்நீர் எட்டா(து) இடைமறித்து,
தம்மவர் போக்கில் தடுப்பணைகள் - வன்முறையாய்க்
கட்டுகின்றார் ஆந்திரரும் கர்நா டகத்தாரும்:
கெட்டவரை யார்கேட் பது?..

முலைசுரந்து பால்வார்க்கும் முன்னறிதெய் வம்போல்
அலைசொரிந்(து) எம்கூழ் அளக்கும் - விலைகடந்த
ஆறுகளே! நீவிர் அறமற்றுப் போவீரேல்
ஆறுதலாய் எம்மவர்க்(கு)இங்(கு) ஆர்?..

*******

கொல்லாத "கொல்லா"ம் பழம்!..


பச்சிலைகள் சூழ, பலபூக்கள் ஆங்காங்கே 
மெச்சிநின்ற வாறேதம் மெய்சிலிர்க்க - எச்சில்தனை
ஊறவைத்து, கொய்தற்(கு) உடனே எனைமரத்தில்
ஏறவைத்த தோட்டம் இது.

தித்திக்கும் செங்கனிகள் தீயின் பிழம்புகளாய்
எத்திக்கும் தொங்கும் எழிழ்கண்(டு)என் - புத்திக்குள்
போதைப் படலம் புகுத்தியது, நான்செல்லும்
பாதைநின்ற கொல்லா மரம்.

தென்னைமரத்(து) ஈர்க்கில் செருகியகொல் லாம்பழத்தை
முன்னையெம் பள்ளம் முதுவூரில் - பொன்நிகர்மீன்
கொண்டு,பண்ட மாற்றுக் கொடுத்த நினைவுகளைக்
கொண்டுவரும் கொல்லாம் பழம்.

உப்பை உறிஞ்சிக் கடல்நீரை உள்வாங்கி,
நட்புபகிர்ந் தாற்போல் நனைந்துபட்டு - செப்பமுடன்
ஆழிமணல் மேட்டில் அமர்ந்துண்ட என்நினைவின்
நாழிசொல்லும் நல்ல பழம்.

நள்ளிரவில் நண்பனுடன் நாடான் விளைபுகுந்து
கள்ளமிட்(டு) உண்ட கனிபோக - கொல்லண்டி
சேர்த்தெடுத்(து) ஓடித் தெருமுனைக்கு வந்ததெலாம்
கோர்த்துதரும் கொல்லாம் பழம்.

பச்சைக்கொல் லண்டிப் பருப்பினைப் பால்களையா(து)
இச்சையுடன் தின்ன, இதழ்முழுதும் - நச்சினைப்போல்
பொள்ளிப் படர்ந்திருந்த புண்ணின் நினைவெல்லாம்
சொல்லுகின்ற கொல்லாம் பழம்.

மண்ணில் புதைத்து மறுநாள் அதைஎடுத்து
கண்ணில் படாதவாறு கள்ளருந்தி - எண்ணில்லாச்
சேட்டை புரிந்த சிறுவயது நாள்களைமுன்
காட்டியது இந்தக் கனி.

ஊரவர்க்கும் உற்றார் உறவினர்க்கும் தேனார்ந்த
சா(று)உவக்கும் நாஞ்சில் சரித்திரம் - வேறெவர்க்கும்
இல்லாத இன்பமெலாம் ஈந்(து),என் நினைவுகளைக்
கொல்லாத "கொல்லா"ம் பழம்!.. 

ஆளுயர மீனே, மீனே..


தோளுயரம் தனையும் தாண்டித்
         தொங்கிநிற்கும் தலைகீழ் மீனே.. 
வாளுயர்த்தி உன்னை வீழ்த்தும் 
       வலுவிருந்தும், வலையில் மாட்டும்
கோளுடையார் எங்கள் நெய்தல்
        குலத்தவர்என்(று) அறிந்து கொள்வாய்:
ஆளுயர மீனே, நாஞ்சில்
          அரையர்கள்தாம் படுத்த மீனே!.. 


திங்கள், 25 ஜூலை, 2016

தொளவை துணையுண்டு!


கட்டு மரம்மீது மீனவன் - அலை
கடலில் தனியொருவன் தானவன்.. 
வெட்டு கடல்வந்து விரட்டினும் - அதன்
விளிம்பை எதிர்கொள்ளுவான் அவன்!..


ஒத்தனா மரத்துக்காரனாம் - கையில்
ஒரு தொளவை மட்டும் தோழனாம்..
அத்தனைக் கடற்பரப்பிலும் - அதை
ஆயுதமாக்கிடும் வீரனாம்!..

கடலின்மீது அவன் செல்லுவான் - அங்குக்
கலங்கிடாது தொழில் செய்குவான்..
உடலில் வீசிடும் உப்பு நீர் - கண்டு
ஒருநிமிடமேனும் ஓய்ந்திடான்!..

உருண்டு திரள்கின்ற அலைகளே - இந்த
ஒத்தனா மரத்தை மூடுவீர்..
மருண்டு போகான் அம்மீனவன் - நீர்தான்
மறுபடியும் விலங்கே ஓடுவீர்!..

படுத்த மீனையும் வலையையும் - இன்று
பாய்ந்து பிடுங்கவா பார்க்கிறீர்?
தொடுத்து வெல்லுவான் மீனவன் - அந்தத்
தொளவை துணையுண்டு, காணுவீர்!..
×××

புதன், 20 ஜூலை, 2016

வந்திடு, வள்ளுவனே!

விடுதலை நாளிதழில்(23-07-2016) வெளிவந்தது. பார்க்க :
http://viduthalai.in/page5/126485.html

(கட்டளைக் கலித்துறை)


காலம் கடந்த கவிப்புல மாகக் கனிந்தவனை..
ஞாலம் உணர்ந்து நயந்த நெறிகளின் ஞாயிறினை..
ஆலம் விழுதினும் ஆயிரம் மேலெனும் ஆளுமையை..
சாலப் பழித்த சதியைஎவ் வாறு சகிப்பதுவே!.. 


நாடுகள் தாண்டிய நாயனார் வள்ளுவன், நாமறிவோம்..
ஏடுகள் போற்றும் எழுத்தர சன்புகழ் இன்றறிவோம்..
காடு களிலுள்ள கல்லின் மனத்தவர் காண்பதுண்டோ
பாடு புகழ்தமிழ்ப் பாவலன் வள்ளுவன் பற்றியதே?..

காவிப் பயல்களும் கண்ட நரிகளும் சாதிவெறிப்
பாவிக ளும்கூடிப் பாவலர் வேளைப் பரிகசித்துக்
கூவிப் புலம்பித் "தலித் இவன்!" என்று குரலெழுப்பித்
தாவிக் குதிக்கின்ற நாக ரிகமெங்குக் கற்றதுவே?..

எங்கள் தமிழன்னை ஈன்ற புதல்வனை இப்படியா
பங்கப் படுத்துவீர் உத்தர காண்டத்துப் பாவியர்காள்?
கங்கைக் கரையென்ன, காணும் கரையெங்கும் காட்சிதந்து
தங்கத் தகுந்தவன் தானெங்கள் ஐயன் தரணியிலே!..

இந்துக் கடற்கரை நின்றே இமயத்தை எட்டிநோக்கும்
செந்தமிழ்ச் செம்மலின் சிங்கம் நிகர்த்த சிலையிருக்க,
மந்த மதியினர்க் கும்பலின் கங்கை மருங்கினிலே
எந்த வகையினில் ஐயனின் தோற்றம் இலங்குவதே?..

தன்னை அளந்து தரணி அளந்து தடம்பதித்த
முன்னைச் சரித்திரம் முற்றும் அளந்த மொழிப்புதல்வன்
பொன்னை அளந்த புகழினன் என்னும் பொருளறியாச்
சின்னவர் முன்னர் திருவள்ளு வற்கேன் சிலையெடுப்பே?..

மதியாதார் வீடும் மடையர்கள் கோவிலும் மாளிகையும்
நதியோரத் தென்றலின் நச்சும் தமிழர் நமக்கெதற்கு?
குதியாட்டம் போடும் குரங்கிடம் நட்பினி கொள்வதுமேன்?
சதிகாரர் கங்கைத் தலம்விட்டு வா,எங்கள் சான்றவனே!..

அடக்க முடியலை: ஆத்திரம் தீரலை: அன்னியரின்
மடத்தனம் தன்னை மடக்க முடியலை: மாற்றலனின்
இடத்தில் உனக்கினி என்ன இருப்பு?சொல், எம்மவனே!
வடக்குக் கிறுக்கன் கிடக்கிறான்: வந்திடு, வள்ளுவனே!..

                ×××××

செவ்வாய், 19 ஜூலை, 2016

பொய்பேசாப் பைங்கிளி.



வெள்ளிக் குடமும் வெறுங்கால் கொலுசோடும்
பள்ளிசெல்லு முன்பே பணியாற்றும் - பிள்ளையவள்
கைவீசிச் செல்லும் கலையழகு காணீரோ,
பொய்பேசாப் பைங்கிளியே போல்!..

                     ××××

ஞாயிறு, 17 ஜூலை, 2016

முருங்கையும் வெறுங்கையும்!..

முற்றத்தே முருங்கையொன்றை நட்டு வைத்தால் 
       முதியவரும் இளமையுடன் வாழ்வார் என்று 
கற்றறிந்தார் பொதுவாகச் சொல்வார்; உண்மை. 
       காரணமும் அனைவருக்கும் தெரிந்த உண்மை..
மற்றிதனை நட்டவனோ வெறுங்கை யோடே
       மக்களிடை நடந்திடுவான் என்னும் கூற்றும்
நற்றமிழர் மத்தியிலோர் பழஞ்சொல் லாக
       நடமாடும் காரணத்தை அறிவீர் கொல்லோ?..

முதுகிழவர் முதுகினில்கூன் விழுந்த பின்னர்
       முன்னொருகைத் தடியூன்றி நடந்து செல்வார்:
எதுவரினும் முருங்கையினைத் தவறா(து) உண்டால்
       இத்தகுகைத் தடியொன்றும் தேவை யில்லை..
இதுகுறித்தே "முருங்கைநட்டான் வெறுங்கை யோடே
       இனிதுநடப் பான்! "என்னும் பழஞ்சொல் தந்தார் :
பொதுவழக்கில் பொருள்பொதிந்த பழஞ்சொல் ஒன்றைப்
       புகுத்தியநம் தமிழ்மரபின் புகழ்தான் என்னே!..

முருங்கைமரத் திற்(கு)"ஊரான் முதலி" யென்றும்,
       முருங்கைக்கன் றிற்(கு)"ஊரான் பிள்ளை" யென்றும்
அருங்குணங்கள் பேசும்ஆயுள் மருத்து வத்தில்
       அர்த்தங்கள் இருப்பதனை அறிகின் றோம்யாம்..
ஒருங்கிதனை நினைத்(து)"ஊரான் பிள்ளை யைநன்(கு)
       ஊட்டிவளர்த் தால்தன்றன் பிள்ளை நன்றாய்ச்
சிறந்துவளர்ந் தோங்கும்!"எனச் செப்பி வைத்தார்..
       செந்தமிழார்ப் பழஞ்சொல்லின் சீர்தான் என்னே!..

       
                            ××××××

சற்றும் ‘மனிதம்’ இல்லை!


ஊர்க்குருவிக் குலமே! -நீங்கள்
உச்சிவானிலே உலாவரும்போதும்
கழுகுகள் ஆவதில்லை -உங்களது
கர்வத்தில் உண்மையில்லை!

வான்கோழிக் கும்பல்களே! -நீங்கள்
வானம் வரைக்கும் சிறகு விரிப்பினும்
வண்ண மயில்களில்லை -உங்களின் 
வரிசை  நடனமில்லை!

மின்மினிப் பூச்சிகளே! -நீங்கள்
மிக்கப் பளபளப்போடு பறக்கினும்
மெழுகு வர்த்தியில்லை -தியாகம் உங்கள் 
மேனிக்குச் சொந்தமில்லை!

காக்கைகள் கூட்டங்களே! -நீங்கள்
காடு முழுதும் திரண்டு கரையினும்
காதுக்(கு) இனிமையில்லை - குயிலிசை
கற்றவர் நீங்களில்லை!

நாணல் குடும்பங்களே! - நீங்கள்
நாற்புறமும் அசைந்தாடிய போதிலும்
நாற்றுகள் ஆவதில்லை -நெல்லின் மணி
நற்கதிர் நீங்களில்லை!

எருக்குத் தோட்டங்களே! - உம்
இலைவழிப் பல்துளிப் பால்சுரந்(து) ஓடினும்
ஏந்த விருப்பமில்லை - விஷம் உம்பால்
என்பதில் சர்ச்சையில்லை!
காகிதத்துப் பூக்களே! -நீங்கள்
கண்ணைப் பறிக்கும் வனப்பில் இருப்பினும்
காதல் விளைவதில்லை -தேனை உங்கள்
காம்பு சுமப்பதில்லை!

கண்மாய்த் தவளைகளே! - நீங்கள்
காற்றைத் ‘தம்’பிடித்துக் காட்டினும் நாங்கள்
கலங்கிடப் போவதில்லை -நீங்கள் ஒன்றும்
காங்கேயம் காளையில்லை!

வெற்றுப் பட்டாசுகளே! -ஒளி
வெள்ளத்தினை நீங்கள் வாரி இறைப்பினும்
வெந்தழல் நீங்களில்லை - நான்கைந்து
வினாடிக்குள் நீங்கள்இல்லை!

சாதிச் சழக்கர்களே! - உங்கள்
சாகசங்கள் கோடி தாண்டிய போதும்
சரித்திரம் உங்கட்(கு)இல்லை! - அந்தோ!
உம்மில் சற்றும் ‘மனிதம்’ இல்லை!

ஒருவரும் வெல்லலையே!..

சங்குத்துறை அழகுக் கடற்கரையில் - எங்கள் 
       சரித்திரம் உறங்கிக் கிடக்கிறது.. 
பொங்கும் நினைவலைகள் ஒவ்வொன்றும் - நெஞ்சில்
       புதிய பூரிப்பு படைக்கிறது!..

ஐம்பதாண்டிற்கு முன்பிருந்தே - இதன்
       அருமை பெருமைகளை நானறிவேன்..
பைம்புனல் அலைகள் தவழ்ந்துவரும் - இந்தப்
       பள்ளம் கடற்கரையின் பாடறிவேன்!..

தாழையொடு கோட்டுப் புன்னைகளும் - நன்கு
       தழைத்த பச்சோலைத் தென்னைகளும்..
வேலிக் கற்றாழையொடு பிரண்டை - சுற்றி
       விரவிக் கிடந்த கடற் சோலையது!..

புத்தன்துறை சென்று படிப்பதற்கு - இந்தப்
       பொழிலின் வழியாகச் சென்றுள்ளேன்..
சத்தம் போட்டு பல பாடல்களைச் - சொல்லிச்
       சங்கீத பாடம் பயின்றுள்ளேன்!..

கொட்டுகுளம் வீழ்ந்து குளித்துள்ளேன் - அங்குக்     
       குட்டிச் சிப்பிநண்டு பிடித்துள்ளேன்..
செட்டு சேர்த்து அடி வைத்துள்ளேன் - சில
       சீனடிகள் அங்குப் படித்துள்ளேன்!..

ஈர மணல் திடலின் உள்ளிருந்து - நான்
       எடுத்த விளாங்கினை வகுப்பறையில்
ஊரவிட்டு இளம் டீச்சர்களைப் - பயந்(து)
       ஓடவிட்டுக் குறும்(பு) இழைத்துள்ளேன்!..

முளளுருண்டைகளை உருட்டிவிட்டு - அவை
       முந்திடாதபடி ஓடி வென்று..
எள்ளுருண்டைகளைப் பரிசு பெற்று - மூச்(சு)
       இரைக்க இரைக்க நான் சிரித்துள்ளேன்!..

அள்ளும் எழில் சங்குத் துறையலையே - உன்மேல்
       ஆசை எனக்கின்னும் குறையலையே..
உள்ளம் கவர் பள்ளம் வெள்ளலையே - உன்னை

      ஒருவரும் இதுவரை வெல்லலையே!..



                       ****